Sunday, October 01, 2006

மங்கலை செங்கலசம் முலையாள் (பாடல் 21)



மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே

மங்கலை - மங்கல உருவானவளே. என்றும் சுமங்கலியே.

செங்கலசம் முலையாள் - செம்மையான கலசம் போன்ற முலைகளை உடையவளே.

மலையாள் - மலைமகளே. இமயத்தரசன் மகளே.

வருணச் சங்கு அலை செங்கைச் சகலகலாமயில் - வருணனின் இருப்பிடமான கடல் தந்த சங்குகளால் ஆன வளையல்கள் அணிந்து அவை அங்கும் இங்கும் அலையும் செம்மையான கைகளை உடைய எல்லா கலைகளும் அறிந்த மயிலே

தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் - பாய்கின்ற கங்கையின் பொங்குகின்ற அலைகள் தங்கும் மேல்தூக்கி முடித்த சடையை உடையவனின் பகுதியானவளே

உடையாள் - எல்லோருக்கும் தலைவியே. எல்லோரையும் எல்லாவற்றையும் உடையவளே.

பிங்கலை - பொன்னிறத்தவளே.

நீலி - நீல நிறத்தவளே. கரு நிறத்தவளே.

செய்யாள் - சிவந்தவளே.

வெளியாள் - வெண்மை நிறம் கொண்டவளே.

பசும் பெண்கொடியே - பச்சை நிறம் கொண்ட பெண் கொடியே.

***

இந்தப் பாடல் முழுக்க முழுக்க தோத்திரமாகவே அன்னையில் புகழைப் பாடுவதாகவே அமைந்திருக்கிறது.

உலகத்தில் எத்தனையோ குணநலன்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிறம் தந்து உருவகித்துப் பேசுவது மரபு. அந்த எல்லா குணநலன்களும் அன்னையே; அவளிடமிருந்து தோன்றியவையே என்று குறிப்பால் உணர்த்தும் முகமாக அபிராமி பட்டர் அன்னையை 'பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண் கொடியே' என்கிறார் போலும்.