Friday, August 29, 2008

எங்கள் அபிராமி தரிசனம் காண வாரீரே! (அபிராமி அந்தாதி நிறைவு)

அபிராமி அந்தாதிப் பொருளுரை நிறைவாகும் இந்த நல்வேளை! இதுவும் ஒரு வகையில் அப்த பூர்த்தி தான்! Oct 2005-இல் துவங்கிய தேர், பதிவு வீதிகளில் ஆடி ஆடி, இதோ நிலைக்கு வருகிறது! நிறைவுக்கு வருகிறது!
சஷ்டி+அப்த+பூர்த்தி = அறுபது+ஆண்டு+நிறைவு!
அந்தாதிப் பொருளுரையோ, த்ரியப்த பூர்த்தி=மூன்றாண்டு நிறைவு!

இது அப்த பூர்த்தி மட்டுமில்லை! ஆப்த பூர்த்தியும் கூட! விரும்பிய எல்லாம் நிறைவேற்றித் தரும் தமிழ்ப் பனுவல்! நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்! ஆபத்து காலத்தில் OMG என்றோ, Gotcha-ன்னோ அடியேன் வாய்க்கு வருகிறதா? இத்தனைக்கும் பீட்டர் விட்டே பழகிய வாய்! :) அடக் கடவுளே-ன்னோ, அம்மா-ன்னோ தானே வருகிறது!
அதே போல் அபிராமி பட்டருக்கு, நெருப்பின் நடுவிலே, தாய் மொழியில், தெய்வத் தமிழ் மொழியில், துதியும் பனுவலும் இயல்பாகவே வந்து விட்டது!
இத்தனைக்கும் அவர் வடமொழி வித்தகர்! சகல சாஸ்திர பண்டிதர்! இருப்பினும் அம்மா என்று அழைக்கும் போது, அம்மா மொழியில் தானே அழைக்க முடியும்!

விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு என்று பாடி விட்டார் பட்டர்! தோன்றி விட்டாள் அன்னை!
விழிக்கே அருள் உண்டு என்ற....
பாட்டை எடுத்த போது தான், அன்னைத் தோட்டை எடுத்தாள்!
வீசினாள், முக வானிலே சந்திரனைப் பூசினாள்!

ஒரே நேரத்தில், தை அமாவாசையில், பூமிக்கு இரண்டு சந்திரன்கள்!
பட்டருக்கோ அக நிலவிலே அவள் முக நிலவு! மற்றவர்க்கோ வானிலே புற நிலவு!
சாட்சி கேட்கும் புற நிலவு தேய்ந்து விடும்!
ஆனால் நம் அக நிலவும் முக நிலவு மட்டும் தேயவே தேயாது!

வாருங்கள் அபிராமி அந்தாதி பொருளுரையின் இந்த அப்த பூர்த்திக்கு, திருக்கடையூர் சென்று அம்மாவைச் சேவிப்போம்! தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தி அழகு பார்ப்போம்!


மயிலாடுதுறை-நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம் திருக்கடவூர்! திருக்கடையூர் என்றும் சொல்லலாம்! கடம்=பானை, கலம்! கடை=கடைதல்! எனவே ரெண்டுமே சரி தான்!
கடலைக் கடைந்த போது, அமுதம் கிடைத்த பாத்திரத்துக்குப் பேரு தான், அமிர்த கடம்!
நம் போன்ற உயிர்களுக்கு வேண்டிய அமுதம்/இன்பம் எல்லாம் இருக்கும் கடம் எதுங்க?

இறைவன்! இறைவன் தான் கொள்கலம்! அதில் தான் அமுதம்/இன்பம் கொள்ளும்!
நமக்கு வேண்டும் போது மட்டும், அதில் இருந்து இன்பங்களை எடுத்துக் கொள்கிறோம்! பின்னர் கலத்தை மறந்து விடுகிறோம்! மீண்டும் அடுத்த முறை ஏதாவது நிறைக்க வேண்டி இருக்கும் போது தான, நமக்குக் கலம் தேவைப்படுகிறது!:)

அவரவர் பாப புண்ணியங்களுக்கு ஏற்றவாறு, அமுதம் வழங்கும் அதிகாரி சிவபெருமான்! அதான், ஈசனே கொள்கலமாய், அமிர்தம் கொண்டுள்ள கடமாய் வந்தான்! தன்வந்திரிப் பெருமாள் கைகளிலும், மோகினியின் கைகளிலும் தவழ்ந்தான்!
அந்த அமிர்த கடமே பின்னர் லிங்கமாய் மாறி விட்டது! அதனால் தான் அமிர்த கட ஈஸ்வரர்! அவர் தர்ம பத்தினி அபிராமி அன்னை!

பார்த்தீர்களா? பாற்கடல் கடைந்த போது தான் எத்தனை எத்தனை தத்துவங்கள்! எத்தனை எத்தனை தெய்வ வடிவங்கள்!
கூர்மாவதாரம், நீலகண்டன், அலைமாகள் ஸ்ரீ மகாலக்ஷ்மி, மோகினித் திருக்கோலம், தன்வந்திரிப் பெருமாள், அமிர்த கடம், அமிர்த கட ஈஸ்வரர், அருள்வாமி அபிராமி! - இப்படி தெய்வத் திருவுலா!


சரி, ஏன் அறுபதாம் கல்யாணம், மணி விழா, சஷ்டி அப்த பூர்த்தியைத் திருக்கடையூரில் செய்து கொள்ள நினைக்கிறார்கள்?
இது மார்க்கண்டேயனுக்காக, யமனை வென்ற தலம்! சிரஞ்சீவித் தலம்!
அதான், என்றும் சீரஞ்சீவி-சுமங்கலியாக வாழ்ந்து, இல்லறம் நடாத்த, இங்கு செய்து கொள்கிறார்கள்!
கணவரின்,
59 முடிந்து 60 துவக்கம் = அர்த்த ரத சாந்தி
60 முடிந்து 61 துவக்கம் = சஷ்டி அப்த பூர்த்தி
69 முடிந்து 70 துவக்கம் = பீம ரத சாந்தி
79 முடிந்து 80 துவக்கம் = சதாபிஷேகம்!

யமனை வென்ற ஈஸ்வரன் மிருத்யுஞ் ஜெய ஈஸ்வரன்! பாலாம்பிகை!
அட, அம்பிகை இங்கே எதற்கு வந்தாள்? யமனை வெல்லும் போது கூட அருகில் துணைவி வேண்டும்! துணையை எதிலுமே ஒதுக்குவதில்லை! அழித்தலிலும் இருப்பாள்! ஆக்கத்திலும் இருப்பாள்!!
இப்படி, இந்தத் தலத்தில் இப்படி இரண்டு ஈஸ்வரர்கள்! இரண்டு அம்பிகைகள்!
மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகை! அமிர்தகடேஸ்வரர்-அபிராமி!!

அறுபதாம் கல்யாணம் செய்து கொள்ள திருக்கடையூர் தான் போக வேணுமா?
அவசியம் இல்லை! அவரவர் நிலைமையைப் பொறுத்தது தான்!
நித்ய கல்யாணமாய் இருக்கும் பல ஆலயங்களிலும் செய்து கொள்ளலாம்!
தினமும் கல்யாணம் நடந்து கொண்டே இருக்கும் தலங்கள் பல! நித்ய சுமங்கலித் தலங்கள் அவை!
சென்னைக்கு அருகே திருவிடந்தை, திருப்பதி திருமலை இங்கெல்லாம் நித்யமும் கல்யாணம் தான்! ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன ஈஸ்வரனுக்கும் நித்ய கல்யாணம்!
அவரவர் இல்லத்திலும் செய்து கொள்வார்கள்! எங்கு செய்து கொண்டாலும், அது பெருமாள் கோயிலோ, சிவன் கோயிலோ, வீட்டிலோ,
அங்கு மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகை ஆகிய இருவரையும், மந்திரப் பூர்வமாகக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து வைப்பார்கள்!
எப்பவுமே, சங்கரன்-சங்கரிகள் ஆசியோடு தான் இந்த விழா!


வாருங்கள்...
அதோ கோயில் யானை மாலையுடன் வரவேற்கிறது! கஜ பூஜை முடித்து, பின்னர் கோ பூஜையில் அன்னை மகாலஷ்மியை வளமுடன் வேண்டிக் கொள்வோம்! ஆலயத்துக்குள் நுழைந்து விட்டோம்!

கள்ள வாரணப் பிள்ளையாரைத் தரிசித்து, பின்னர் மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகையைச் சேவிப்போம்! நீண்ட ஆயுளுடன், நிறைந்த ஆயுளையும் அருள வணங்கி மகிழ்வோம்!

இதோ அப்பனின் சன்னிதி!
அமிர்த கடேஸ்வரன் குடம் போலவே தெரிகிறான்!
வழியில் இது என்ன இம்புட்டு மல்லிக் கொடிகள்? ஜாதி மல்லி தான் தல விருட்சம்!
மோகினித் திருக்கோலத்துக்கு உகந்த மலர் ஜாதி மல்லி அல்லவா? மலர்கள் சுவாமிக்கு மட்டுமே சார்த்தப்படுகின்றன!
தேவார மூவரும் அப்பனைப் பாடி உள்ளார்கள்! திருநீற்றுப் பிரசாதம் தரித்துக் கொண்டு, அம்மாவைப் பார்க்கச் செல்லலாமா?


இதோ வந்து விட்டோம்!
அழகிய கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட அபிராம சுந்தரி சன்னிதி!
சாயரட்சை என்னும் மாலை நேரப் பூசை!
சன்னிதி எங்கும் மின்னி மினுக்கும் தீபங்கள்! சாம்பிராணி அகிற் புகை!
செண்டை, கொம்பு, கோல், சங்கு, நாதசுர மங்கல வாத்தியங்கள் முழங்குகின்றன!
மேடையில் அம்பாளுக்குச் செய்ய இருக்கும் சோடஷ உபசாரம்! பதினாறு வகையான உபசரிப்புகள்! தீபகலசம் முதலான பூசைப் பொருட்கள்!

இதோ திரை விலகுகிறது!
ஜகத்ஜோதி, ஜோதி ஸ்வரூபிணியாய், மதிவதன பிம்பமாய் அம்பாள் ஜொலிக்கின்றாளே!
ஆத்தாளை! எங்கள் அபிராம வல்லியை! அண்டம் எல்லாம்
பூத்தாளை! மாதுளம் பூ நிறத்தாளை! புவி அடங்கக்
காத்தாளை! ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும், அங்கை
சேர்த்தாளை! முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!

ஐந்தடக்கு தீபத் தட்டு அன்னையின் திருமேனிப் பிரதிட்சணமாய்ச் சுழல்கிறது! எல்லாரும் கூடி இருந்து, குளிர்ந்தேலோ-ன்னு சேவித்துக் கொள்ளுங்கள்!

பாதபத்ம பீடம்! தாமரைத் திருவடிகள்!
வெள்ளி மெட்டி பிஞ்சு விரல்களில் கொஞ்சுகிறது! காற்சிலம்பு மின்னுகிறது!
அம்மாவின் பாதங்களிலே, சேலையின் விசிறி மடிப்பு அருவியாய் வந்து விழுகிறது!
அண்ணனைப் போலவே பச்சைத் திருமேனி! அந்தப் பச்சை மேனியிலே, அரக்குச் சிவப்பிலே, பட்டுச் சீலையிலே பார்வதி ஜொலிக்கின்றாள்!
(பாதாரவிந்த தீப சேவை)

அண்ணன் அபிராமன்! தங்கை அபிராமி!
அவர்களின் தரிசனமே அபி என்னும் இன்பம் கொடுத்து, ரமிக்க வைக்கிறதே!
அபிராம இங்கு வருக! மைந்த வருக! மகனே இனி வருக! என்கண் வருக! எனது ஆருயிர் வருக! வருகவே!

அபய ஹஸ்தம் = அஞ்சேல் எனுமொரு கரம்!
வரத ஹஸ்தம் = வா, தந்தேன் எனுமொரு கரம்!
கரங்களிலே கலகலவென வளை குலுங்க,
புறங்களிலே ஜிலுஜிலுவென பூமாலை தொங்க,

மார்பணியும், கழுத்தணியும், அத்தாணிப் பூணும், அட்டிகையும் தவழ்ந்திலங்க,
பின்னிரு கைகளிலே சக்கரமும், சங்கும் ஏந்திச் சேவை சாதிக்கின்றாள்!
நமஸ்தேஷூ மகாமாயே, ஸ்ரீபீடே, சுர பூஜிதே!
சங்கு சக்ர கதா ஹஸ்தே, மகாலக்ஷ்மீ, நமோஸ்துதே!

(கரதல கமல தீப சேவை)

அம்மாவின் சக்கரத் தோளிலே பச்சைக்கிளி!
சங்குத் தோளிலே செங்கரும்பு!
நித்ய சுமங்கலியின் பச்சைக் கழுத்திலே திவ்யத் திருமாங்கல்யம்!
தம்பதிகளும், காதலரும், இன்னும் எல்லாரும் கண்ணாரச் சேவித்துக் கொள்ளுங்கள்!
சுவாசினிப் ப்ரியே மாதே, செளமாங்கல்ய விவர்தினீ!
மாங்கல்யம் தேஹீ மே நித்யம்! ஸ்ரீ அபிராமீ நமோஸ்துதே!!

(மாங்கல்ய பலப் ப்ரத தீப சேவை)
சர்வ மங்கள மாங்கல்யே! சிவே! சர்வார்த்த சாதிகே!
சரண்யே! த்ரயம்பகே! கெளரீ! நாராயணி நமோஸ்துதே!!


அன்னையின் திருமுக தரிசனம்! கோடி சந்திரக் குளிர் பிரகாசம்!
இவள் தாடங்கம் வீசித் தானா நிலவு உதிக்க வேண்டும்?
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், நெற்றியிலே விபூதிச் சுட்டி!
கருவிழிக் கண்கள் கடாட்சித்து நிற்க,
மீன-அக்ஷி, காம-அக்ஷி, விசால-அக்ஷி என்று அனைத்து அன்னையரின் கடைக்கண் பார்வையும், எங்கள் அபிராமியின் கருவிழியிலே!
(நேத்ரானந்த தீப சேவை)

காதிலே தாடங்கம் மின்ன, ஒய்யாரக் கொண்டையிலே ஆண்டாள் கொண்டை அலங்கரிக்க, திருவாசி மாலைகள் பின்னே திகழ,
அபிராம வல்லியின், அருள் கோலம் காணீர்! அருள் கோலம் காணீர்!
சந்திர மண்டல மத்யஸ்தே, மஹா திரிபுர சுந்தரீ!
ஸ்ரீ சக்ர ராஜ நிலையே! ஸ்ரீ அபிராமீ நமோஸ்துதே!!

(பாதாதி கேச பரிமள நீராஞ்சன கர்ப்பூர தீப சேவை)

01. கலையாத கல்வியும்
02. குறையாத வயதும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
04. கன்றாத வளமையும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணியிலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பகலாத மனைவியும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும்
15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்
16. துய்யநின் பாதத்தில் அன்பும்
உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்!!!!!
அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!!


அபிராமியம்பிகா திவ்ய சரணார விந்தயோஹோ,
தீப மங்கள கர்ப்பூர நீராஞ்சனம் தரிசயாமி!


அருள்வாமி அபிராமி திருவடிச் சரணங்களிலே,
திவ்ய மங்கள கர்ப்பூரத் தீப தரிசனம் காண்மின்களே!

இதோ, கர்ப்பூர ஆரத்தியை ஒற்றிக் கொள்ளுங்கள்! அபிராமி அம்மன் திருவடிகளே சரணம் சரணம்!!


நண்பர் குமரன் பணிவோடு சமர்ப்பித்த அபிராமி அந்தாதிப் பொருளுரை சம்பூர்ணம்!

(வரும் புரட்டாசி மாதத்தில், நியூயார்க்கில் இருந்து, திருக்கடவூர் அபிராமவல்லியைத் தரிசிக்க இந்தியப் பயணத் திட்டம்!
அம்மா-அப்பாவின் அப்த பூர்த்தி! ஆசி கூறுவீர்! சுபம்)


**************************************************

அடியேனின் வேண்டுகோளுக்கு இணங்க அபிராமி அந்தாதி பொருளுரையின் நிறைவாக அன்னையின் தெய்வீகத் திருவுருவ தரிசனத்தை நாமெல்லாம் பெறும்படி செய்த நண்பர் இரவிசங்கர் கண்ணபிரானுக்கு அடியேனின் பல நூறு வணக்கங்கள். அன்னையின் ஆரத்தி பாடலை தந்துதவிய கவிநயா அக்காவிற்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். வாழ்க வளமுடன்!

*************************************************

அபிராமி அந்தாதியின் ஒலிச்சுட்டியைத் தர வேண்டும் என்று சில நண்பர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் சொற்படி இதோ திரு. சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அபிராமி அந்தாதியின் ஒலிச்சுட்டிகள்:

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதி, நான்காம் பகுதி.

திரு.புலவர் கீரன் அபிராமி அந்தாதிக்குச் சொன்ன விரிவுரையை இங்கே காணலாம்.

Tuesday, August 19, 2008

ஆத்தாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே (அபிராமி அந்தாதி நூற்பயன்)


ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே

ஆத்தாளை - அம்மா என்று அழைப்பதற்குத் தகுதியுள்ள ஒரே அன்னையை

எங்கள் அபிராமவல்லியை - எங்கள் அபிராமியை

அண்டம் எல்லாம் பூத்தாளை - எல்லா உலகங்களையும் பெற்றவளை

மாதுளம் பூ நிறத்தாளை - மாதுளம் பூ நிறம் கொண்டவளை

புவி அடங்கக் காத்தாளை - எல்லா உலகங்களும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு அவற்றைக் காப்பவளை

ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை - உலக இயக்கத்திற்கு அடிப்படையான ஐந்து மலர்க்கணைகளையும் கரும்பு வில்லையும், அவற்றுடன் பாசத்தையும் அங்குசத்தையும் அழகிய திருக்கைகளில் ஏந்தியிருப்பவளை

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே - மூன்று திருக்கண்களைக் கொண்டவளைத் தொழுபவர்களுக்கு ஒரு தீங்கும் இல்லை.

***

அபிராமி அந்தாதிப் பனுவலின் நூற்பயன் பாடல் இது. என்ன பெயர் கொண்டு அழைத்தாலும் ஆத்தா என்றோ அம்மா என்றோ அவளை அழைப்பதில் தானே நமது எல்லா உணர்வுகளும் இணைந்து இயங்கி வருகின்றன. அந்தச் சொல்லைக் கொண்டு இந்தப் பாடல் தொடங்குகிறது. தொடர்ந்து அன்னையின் திருவுருவ தியானம் நடைபெறுகிறது. அத்துடன் அவள் மும்மூர்த்திகளின் வடிவமாக இருக்கிறாள் என்பதால் 'அண்டம் எல்லாம் பூத்தாளை' என்பதன் மூலம் பிரம்ம ஸ்வரூபிணியாக இருப்பதையும் 'புவியடங்கக் காத்தாளை' என்பதன் மூலம் விஷ்ணு ரூபிணியாக இருப்பதையும் 'முக்கண்ணியை' என்பதன் மூலம் சிவஸ்வரூபிணியாக இருப்பதையும் இந்தப் பாடல் சொல்கிறது. அவை அப்படியே முன்பொரு பாடலில் 'பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே' என்று சொன்னதன் பிரதிபலிப்பு போல் இருக்கிறது.

அப்படிப்பட்ட அன்னையைத் தொழுவோர்க்கு இது கிடைக்கும் அது கிடைக்கும் என்று சிற்சில பயன்களைச் சொல்லாமல் ஒரேயடியாக ஒரு தீங்கும் இல்லை என்று சொல்லி எல்லா விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பதை இந்தப் பாடல் சொல்லிவிட்டது.

***

எதுகை: ஆத்தாளை, பூத்தாளை, காத்தாளை, சேர்த்தாளை

மோனை: ஆத்தாளை - அபிராமவல்லியை - அண்டமெல்லாம், பூத்தாளை - பூ - புவியடங்க, காத்தாளை - கரும்புவில்லும், சேர்த்தாளை - தொழுவார்க்கு - தீங்கும்.

***
அன்னையின் திருப்படத்தைத் தந்துதவிய கவிநயா அக்காவிற்கு நன்றிகள்.

Friday, August 01, 2008

நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே (அபிராமி அந்தாதி 100வது பாடல்)


குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே


குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி - காதில் அணிந்துள்ள குழைகளைத் தொடும் படியாகத் தொடுக்கப்பட்டிருக்கும் கொன்றை மாலையை அணிந்து அந்த மாலையால் மணம் கமழும் கொங்கைகளைக் கொண்டுள்ள அன்னையே

கழையைப் பொருத திருநெடுந்தோளும் - மூங்கிலுடன் போட்டியிடும் அழகிய நீண்ட திருத்தோள்களும்

கருப்பு வில்லும் - திருக்கையில் ஏந்திய கரும்பு வில்லும்

விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் - கலவிப் போரில் விழைவைக் கூட்டும் மணம் வீசும் மலர்ப்பாணங்களும்

வெண் நகையும் - வெண்மையான முத்துப்பல் புன்சிரிப்பும்

உழையைப் பொரு கண்ணும் - மானுடன் போட்டியிடும் அழகிய திருக்கண்களும்

நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே - உன் அருளால் என் நெஞ்சில் எப்போதும் அப்போதே உதித்த செங்கதிர் போல் விளங்குகின்றன.

***

அபிராமி அந்தாதியின் இறுதிப் பாடல் இது. முதல் வாசிப்பில் அன்னையை மட்டுமே அவளின் திருத்தோற்றத்தை மட்டுமே புகழ்வது போல் தோன்றினாலும் கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால் அன்னையையும் அப்பனையும் அவர்கள் இணைந்திருக்கும் திருக்கோலத்தையும் புகழ்வது தெரிகிறது. முதல் வாசிப்போடு நிறுத்தாமல் ஆழ்ந்த நோக்கையும் தந்தருளியதற்கு அன்னையின் திருவடிகளுக்கு எல்லையில்லாத கோடி வணக்கங்கள்.

குழை என்றால் தழை, மெல்லிய இலை என்பது முதற்பொருள். இலை தழைகளை அழகுடன் காதணியாக அணிந்து கொண்ட நாட்களில் இச்சொல் காதணிக்கும் பெயர் ஆகி தற்போது குழை என்றால் காதணியென்றே பொருள் தருகின்றது. குழையைத் தழுவும் கொன்றை மாலை என்னும் போது அழகிய மெல்லிய இலைகளையும் சேர்த்துக் கட்டிய கொன்றை மாலை என்றும் பொருள் கொள்ளலாம். குழை என்றால் காதணி என்ற பொருளைக் கொண்டால் கழுத்திலும் தோளிலும் போட்டுக் கொண்டிருக்கும் மாலை காதில் அணிந்துள்ள குழைகளுடன் கொஞ்சிக் கொண்டிருக்கின்றது என்று பொருள் கிடைக்கிறது. அப்படி குழைகளைத் தழுவ வேண்டும் என்றால் அந்த மாலை மிகவும் நெருக்கமாகவும் நிறைய மலர்களையும் வைத்து மிகச் சிறப்பாகத் தொடுக்கப் பட்டிருக்க வேண்டும். அபிராமி பட்டரின் திருவுள்ளத்தில் உதிக்கும் அன்னை அப்படிப்பட்ட மாலையை அணிந்து கொண்டிருக்கிறாள்.

இப்படி முதல் பார்வையில் தோன்றிய முதல் வரி ஆழ் நோக்கில் பார்க்கும் போது வேறு ஆழ்ந்த பொருளைத் தருகிறது. தார் என்பது ஆண்டாள் மாலை என்பார்களே அது போல் இருபுறமும் இணையாமல் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வகை மாலை. அது ஆண்களுக்கு உரியது. வட்டவடிவில் தொடுக்கப்படுவது பெண்களுக்கும் வட்டமாகத் தொடுக்காமல் கழுத்தைச் சுற்றி அணிந்து தொடை, முழங்காலைத் தொடும் படி அமைப்பது ஆண்களுக்கும் என்று இலக்கணம் அமைத்திருக்கிறார்கள். கண்ணனுக்கு எனத் தொடுக்கப்பட்ட 'தார்' என்னும் மாலையை அணிந்து ஆண்டாள் அழகு பார்க்கிறாள். அவளுக்கு என்று தொடுக்காததால் அது வட்ட வடிவமாக அமையவில்லை. ஆண்டாள் அன்று அந்தத் தாரை அணிந்து அழகு பார்த்த நாள் முதல் பெண்களுக்கும் சிறப்பாக கோதைக்கு உரிய மாலை இது என்று ஆகி அதற்கே 'ஆண்டாள் மாலை' என்று பெயர் அமைந்துவிட்டது. இங்கே அபிராமி பட்டர் மாலை என்று சொல்லாமல் தார் என்று சொல்கிறாரே என்று ஒரு நொடி தயங்கும் போது அந்தத் தாரும் கொன்றையந்தார் என்று பார்த்து 'ஆகா. இதனையா சொல்கிறார் பட்டர்' என்ற வியப்பு தோன்றிவிடுகிறது.

இதற்கு மேலும் ஆராய்ச்சி தேவையா? கொன்றை மலர் யாருக்குரியது? ஐயனுக்கு உரியதன்றோ? கொன்றை மலரால் தொடுக்கப்பட்ட தாரை அணிந்தவர் சிவபெருமான் தானே. அந்தக் கொன்றையந்தார் இப்போது அன்னையின் திருமேனியின் மேல். வந்தது எப்படி? அவன் அணிந்து இவளுடன் இணையும் போது தந்தான் போலும். இல்லையேல் இவளும் ஆண்டாளைப் போல் அவன் அணிவதற்கு முன்னால் அணிந்து கொண்டாள் போலும். இல்லையேல் அவன் அணிந்திருப்பது இவளது குழையைத் தழுவி இவள் கொங்கைகளை மணக்க வைக்கும் படி இருவரும் இணைந்திருக்கிறார்கள் போலும்.

மன்மதனுக்கு வெற்றியைத் தரும் கரும்பு வில்லையும் மலர்க்கணைகளையும் ஏந்திய திருவுருவத்தை இங்கே சொன்னதால் ஐயனும் அம்மையும் இணைந்திருக்கும் திருக்கோலத்தைத் தான் பட்டர் சொல்கிறார் என்று தோன்றுகிறது. மூங்கிலை விட மென்மையான அழகிய திருத்தோள்களும் மானை வெல்லும் மருண்ட திருக்கண்களும் திருக்கைகளில் ஏந்திய கரும்பு வில்லும் ஐம்பாணங்களும் அடியார்களுக்கு ஆதரவு தரும் புன்னகையும் பட்டர் திருவுள்ளத்தில் எப்போதும் உதிப்பதைப் போல் அடியோங்கள் உள்ளங்களிலும் எப்போதும் உதிக்கட்டும்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் கனங்குழையே என்று நிறைய இந்தப் பாடல் குழையை என்று தொடங்கியது. இந்தப் பாடல் உதிக்கின்றவே என்று நிறைய இந்தப் பாடல் அபிராமி அந்தாதியின் இறுதிப் பாடல் என்பதால் அபிராமி அந்தாதியின் முதல் பாடல் உதிக்கின்ற என்று தொடங்கியது. ஒரு பாடலின் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. அப்படி அமைக்கும் போது இறுதிப் பாடலின் இறுதிச் சொல்/எழுத்து முதல் பாடல் தொடங்கிய சொல்லாகவோ எழுத்தாகவோ அமைக்கும் போது முழுப்பனுவலும் ஒரு மாலையைப் போல் அமைந்துவிடுகிறது. அந்த வகையில் இந்த அபிராமி அந்தாதி பனுவல் அன்னையின் திருமேனியில் திகழ்கின்ற மாலையாகிறது.

எதுகை: குழையை, கழையை, விழைய, உழையை

மோனை: குழையை - கொன்றை - கமழ் - கொங்கை, கழையை - கருப்புவில்லும், விழைய - வேரியம் - வெண் நகை, உழையை - உதிக்கின்றவே.

Monday, July 28, 2008

கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே (பாடல் 99)




குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே


குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை - கடம்பங்காட்டின் நடுவே குயிலாக இருப்பாள்



கோல வியன் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை - குளிர் நிறைந்த இமய மலையில் வியக்கத்தக்க அழகுடன் கூடிய மயிலாய் இருப்பாள்



வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில் - வானத்தில் வந்து உதித்த கதிரவனாக இருப்பாள்



கமலத்தின் மீது அன்னமாம் - தாமரையின் மீது அமர்ந்திருக்கும் அன்னத்தைப் போன்றவள்



கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே - கயிலாயத்தில் வாழும் சிவபெருமானுக்கு இமயமலையரசனான இமவான் முன்னர் அன்புடன் அளித்த அழகிய காதணிகளை அணிந்த அம்மை.


கடம்ப மலர்கள் அம்மைக்கும் பிடிக்கும் அறுமுகனுக்கும் பிடிக்கும். கடம்ப மலர்கள் சூடி மகிழ்கிறான் குமரன். அந்த கடம்ப வனத்திடை வசித்து மகிழ்கிறாள் அன்னை. கடம்பவனம் எங்கும் இருக்கலாம். ஆனால் பொதுவாக 'கடம்பவனம்' என்றதும் நினைவிற்கு வருவது மதுரை. மீனாட்சி திருக்கோவிலின் தல மரமும் கடம்பமே. இந்தக் கடம்பவனத்திலே வசிப்பவள் பச்சை நிறம் கொண்டவள். கிளியைக் கையில் கொண்டவள். அவளது இன்னொரு பெயர் மாதங்கி. அவள் இசையில் வல்லவள். அவளை வணங்குபவர்களுக்கு இசையை அருள்பவள். இசையின் உருவகம் குயில். இசையை அருள்வதாலும் இசையில் வல்லவள் என்பதாலும் கடம்ப மரத்தின் மேல் வசிக்கும் குயிலென அன்னையைக் கூறினார் போலும்.

குயிலுக்கு குரல் அழகு உண்டு. மேனி அழகு இல்லை. மயிலுக்கோ குரல் அழகு இல்லை. மேனி அழகு உண்டு. அன்னையோ குரல் அழகும் கொண்டவள்; வியக்கத்தக்க மேனி அழகும் கொண்டவள். அதனால் தான் குயிலைப் போலும் இருக்கிறாள்; மயிலைப் போலும் இருக்கிறாள் என்றார் போலும்.

ஹிம என்றால் குளிர் என்று பொருள். குளிர் மிகுதியாகக் கொண்ட மலையாதலால் ஹிமயம், ஹிமாசலம், ஹிமாலயம் என்ற பெயர்கள் அந்த மலைத்தொடருக்கு உண்டானது. அந்தக் குளிர்ந்த இமயாசலத்தில் அழகிய மயிலாக இருக்கிறாள் அன்னை.

காலையில் செங்கதிராம் உச்சி வேளையில் வெண்கதிராம்
மாலையில் பொன்கதிராம் பராசக்தி நீலவானத்தினிலே


என்று பாடினான் ஒரு புலவன். அபிராமி பட்டர் அன்னையை 'விசும்பில் வந்துதித்த வெயில்' என்று சொன்னதை வைத்துத் தான் பாடினான் போலும் அந்தப் புலவனும். உலகங்களுக்கெல்லாம் ஒளி தரும் சோதிகளாக இருப்பவள் அன்னை. அறிவும் தெளிவும் தருபவள் அன்னை.

தாமரை மலருக்கும் அன்னத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆன்மிக மலர்ச்சிக்குத் தாமரையை குறியீடாகச் சொல்லுவார்கள். ஆன்மிக மலர்ச்சி அடைந்த அறிவும் தெளிவும் நிறைந்த ஆன்றோர்களை அன்னப்பறவையாகச் சொல்வார்கள். ஹம்ஸர்கள் என்றும் பரமஹம்ஸர்கள் என்றும் அவர்களை அழைப்பார்கள். அப்படிப்பட்ட பரமஹம்ஸர்களைக் குறிக்க தாமரையின் மேல் அமர்ந்திருக்கும் அன்னப்பறவை குறியீடாக அமையும். இராமகிருஷ்ண இயக்கத்தின் குறியீடாகவும் அதனைக் காணலாம். அப்படி பரமஹம்ஸர்களின் மொத்த உருவமாக அமர்பவள் அன்னை.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பூங்குயிலே என்று நிறைய இந்தப் பாடல் குயிலாய் என்று தொடங்கியது. இந்தப் பாடல் கனங்குழையே என்று நிறைய அடுத்தப் பாடல் குழையை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: குயிலாய், மயிலாய், வெயிலாய், கயிலாயருக்கு

மோனை: குயிலாய் - கடம்பாடவி - கோலவியன், மயிலாய் - வந்து, வெயிலாய் - விசும்பில், கயிலாயருக்கு - கனங்குழையே.

Wednesday, July 16, 2008

மெய்யடியார் நெஞ்சில் புகுந்திருப்பவள் (பாடல் 98)


தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே


தை - தையலே; பெண்களில் சிறந்தவளே.

வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு - நின் முன்னர் வந்து உன்னுடைய திருவடித் தாமரைகளைத் தலையில் சூடிய சிவபெருமானுக்கு

கை வந்த தீயும் - கையிலிருந்த தீயும்

தலை வந்த ஆறும் - திருமுடி மேல் இருந்த கங்கையும்

கரந்ததெங்கே - மறைந்ததெங்கே?

மெய் வந்த நெஞ்சின் அல்லால் - உண்மை தங்கும் நெஞ்சில் அன்றி

ஒரு காலும் - ஒரு போதும்

விரகர் தங்கள் - வஞ்சகர்களில்

பொய் வந்த நெஞ்சில் - பொய் தங்கும் நெஞ்சில்

புகல் அறியா மடப்பூங்குயிலே - புகுந்து தங்காத பூங்குயில் போன்றவளே

***

திருக்கல்யாணத்தின் போது சிவபெருமானின் திருக்கையில் இருந்த தீயும் திருமுடியிலிருந்த கங்கையும் தானாக மறைந்தது என்று இந்தப் பாடலுக்கு ஒரு பொருள் சொல்லப்படுகின்றது.

அன்னையுடன் கூடிய ஊடலைத் தணிப்பதற்காக ஐயன் தாள் பணியும் போது கைகளில் நெருப்பிருந்தால் அன்னையின் திருவடிகளுக்கு வெம்மை தந்து ஊடலைக் கூட்டும் என்பதாலும் தலையில் கங்கையிருந்தால் மாற்றாளைக் கண்டு அன்னையின் ஊடல் மிகும் என்பதாலும் அவை தானாக மறைந்தன என்றொரு பொருளும் சொல்லப்படுகின்றது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தையலையே என்று நிறைய இந்தப் பாடல் தைவந்து என்று தொடங்கியது. இந்தப் பாடல் பூங்குயிலே என்று நிறைய அடுத்தப் பாடல் குயிலாய் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தைவந்து, கைவந்த, மெய்வந்த, பொய்வந்த

மோனை: தைவந்து - தாமரை, கைவந்த - கரந்தது, மெய்வந்த - விரகர், பொய்வந்த - புகலறியா - பூங்குயிலே.

Tuesday, June 17, 2008

புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே (பாடல் 97)


ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே


ஆதித்தன் - அதிதியின் மகனான கதிரவன்

அம்புலி - நீரைப் போல் குளிர்ந்த நிலவன்

அங்கி - தீக்கடவுளாம் அக்கினி

குபேரன் - செல்வத்திற்குத் தலைவனாம் குபேரன்

அமரர் தம் கோன் - மரணமிலாதவராம் விண்ணவர்கள் தம் தலைவன் இந்திரன்

போதிற் பிரமன் - தாமரைப்பூவில் பிறந்த/வாழும் பிரமன்

புராரி - திரிபுரங்களை அழித்த சிவன்

முராரி - முராசுரனை அழித்த திருமால்

பொதியமுனி - பொதிகை மலையில் வாழும் அகத்தியர்

காதிப் பொருபடை கந்தன் - போரிட்டு அழிக்கும் படைக்கலம் கொண்ட கந்தன்

கணபதி - கணங்களின் தலைவன் கணபதி

காமன் - மன்மதன்

முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் - முதலான சாதனை புரிந்தவர் எண்ணற்றவர்

போற்றுவர் தையலையே - எப்போதும் அன்னையைப் போற்றுவார்கள்.

அன்னையைப் போற்றிப் புகழ்ந்து புண்ணியம் செய்து அந்தப் புண்ணியத்தால் புண்ணியர் என்ற பெருமையைப் பெற்று அதனை பயனால் உயர்ந்த இடத்தைப் பெற்று சாதித்தவர்கள் எண்ணற்றவர்கள். எல்லோரையும் பட்டியலிட முடியாவிட்டாலும் முடிந்தவரை செய்யலாம் என்று தொடங்கினார் போலும் அபிராமி பட்டர்.

அப்படி எண்ணியவுடன் கண்ணெதிரே தோன்றினான் கதிரவன். அவனைச் சொன்னார் முதலில். அவன் தன் ஒளியையும் வெம்மையையும் பெற்றது அன்னையிடம். அவனைச் சொன்னவுடன் அம்புலி நினைவிற்கு வந்தான். அவனையும் சொன்னார். அவன் குளுமையைப் பெற்றது அன்னையிடம். உலகத்தில் முச்சோதி என்று புகழப்படும் கதிரவன், நிலவன், தீ என்ற மூவரில் அடுத்ததாக அக்கினி நினைவிற்கு வந்தான். அவனையும் சொன்னார். அவன் தன் திறனையெல்லாம் பெற்றது அன்னையிடம். அக்கினி தேவர்களில் ஒருவனாகவும் இருப்பதால் அடுத்து இரு தேவர்கள் நினைவிற்கு வந்தார்கள். குபேரனையும் இந்திரனையும் சொன்னார். குபேரன் செல்வத்திற்கெல்லாம் அதிபதியாக இருப்பதும் இந்திரன் தேவர்களுக்கெல்லாம் தலைவனாய் இருப்பதும் அன்னையின் அருளால்.

தேவர்களின் தலைவன் என்று இந்திரனைச் சொன்ன பிறகு அவனுக்கும் மேலான முப்பெரும்தேவர்கள் நினைவிற்கு வந்தார்கள். பூவில் பிறந்த பிரமனையும், சிவனையும், திருமாலையும் சொன்னார். இம்மூவரும் தத்தம் படைத்தல், அழித்தல், காத்தல் என்ற தொழில்களைச் செய்யும் வல்லமை பெற்றது அன்னையின் திருவருளால். அடுத்து யார் என்று சிந்திக்க பொதிய முனி நினைவிற்கு வந்தார். அகத்தியர் தமிழைப் பெற்று வளர்த்ததும் அன்னையின் திருவருளால். தமிழ் என்றதும் காதிப்பொருபடை கந்தன் நினைவிற்கு வந்தான். அவனையும் சொன்னார். அன்னையின் சக்தியே உருவான சக்திவேலைக் கொண்டு தானே கந்தன் போரிடுகிறான். அந்தச் சக்தி வேலை குறிப்பாகச் சொல்லுவது போல் காதிப்பொருபடை என்ற அடைமொழியைக் கந்தனுக்குத் தந்தார். தம்பியைச் சொன்னவுடன் அண்ணன் நினைவு வந்தது. அவனையும் சொன்னார். எல்லோரையும் சொன்ன பின்னர் 'அடடா மிக முக்கியமான ஒருவனை விட்டுவிட்டோமே. அன்னையின் திருவருளால் அன்றோ இவன் காமேஸ்வரனையும் வெல்ல முடிகிறது' என்று எண்ணி காமனையும் சொன்னார். இனி சொல்லி முடியாது என்று எண்ணிலர் என்று நிறைவு செய்தார்.

***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஆதிபரே என்று நிறைய இந்தப் பாடல் ஆதித்தன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தையலையே என்று நிறைய அடுத்தப் பாடல் தைவந்து என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: ஆதித்தன், போதிற்பிரமன், காதிப்பொருபடை, சாதித்த

மோனை: ஆதித்தன் - அம்புலி - அங்கி - அமரர், போதில் - பிரமன் - புராரி - பொதியமுனி, காதிப்பொருபடை - கந்தன் - கணபதி - காமன், சாதித்த - தையலையே

Thursday, May 29, 2008

ஆமளவும் தொழுதால் ஏழுலகுக்கும் அதிபர் (பாடல் 96)


கோமளவல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே

கோமளவல்லியை - இளமையும் மென்மையும் கொண்ட கொடி போன்றவளை
அல்லியம் தாமரைக் கோயில் வைகும் - அழகிய அல்லி, தாமரை மலர்களால் ஆன திருக்கோவிலில் வாழும்
யாமளவல்லியை - இறைவருடன் இரட்டையாக நிற்கும் தேவியை
ஏதம் இலாளை - குற்றமொன்றில்லாதவளை
எழுத அரிய - வரைவதற்கு எளிதில்லாத
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை - அழகான கருநிற திருமேனி கொண்ட எல்லா கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை
தம்மால் ஆமளவும் தொழுவார் - தம்மால் முடிந்த அளவும் தொழுபவர்கள்
எழு பாருக்கும் ஆதிபரே - சென்ற இடத்தில் எல்லாம் பெருமை பெறுவார்கள்.

அன்னை இறைவரின் திருமேனியில் ஒரு பகுதியாக அவனுடன் இரட்டைப் பிறவியைப் போல் இருப்பதால் யாமளா என்ற திருப்பெயர் கொள்கிறாள். வரையவோ வடிக்கவோ எளிதில் இயலாத திருமேனி அழகைப் பெற்றவள். மிகவும் மென்மையான கொடியைப் போன்றவள். தாமரைத் திருக்கொவிலில் உறைபவள். குற்றம் குறை என்று ஒன்றுமே இல்லாதவள். அப்படிப்பட்டவளை தம்மால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவில் குறையாமல் தொழுதால் அவர்கள் ஏழு உலகங்களையும் உடையவர்கள் ஆவார்கள்; எழு பார் என்பதற்கு அவர் எழுகின்ற/செல்லுகின்ற இடம் என்று பொருள் கொண்டால் அவர்கள் கால் பட்ட இடத்திற்கெல்லாம் உரிமையாளர்களாக அவர்கள் ஆவார்கள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் கோமளமே என்று நிறைய இந்தப் பாடல் கோமளவல்லியை என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஆதிபரே என்று நிறைய அடுத்தப் பாடல் ஆதித்தன் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: கோமளவல்லியை, யாமளவல்லியை, சாமளமேனி, ஆமளவும்

மோனை: கோமளவல்லியை - கோயில், யாமளவல்லியை - ஏதம் - இலாளை - எழுதரிய, சாமளமேனி - சகலகலாமயில் - தன்னை - தம்மால், ஆமளவும் - ஆதிபரே.
***
சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் உறையும் அன்னையின் திருவுருவப் படத்திற்கு நன்றி: திரு.ஜாக்கி சேகர்